Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, February 20, 2010

ஆழ்மனதிலும் அவள்-சிறுகதை

ஆழ்மனதிலும் அவள்

பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. பள்ளியில் 25 ஆவது ஆண்டு விழாவிற்காக வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார் பள்ளித் தலைமை ஆசிரியர்.மேடையில் தாளாளர்,சிறப்பு விருந்தினர்,விருந்தினர் மற்றும் ஏனைய பொறுப்பு ஆசிரியர்கள் இருந்தனர்.

பள்ளியின் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது மக்கள் முன்னிலையில். பள்ளியின் துணை த்தலைமை ஆசிரியர் வாசித்தார்.
பின்பு ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கோப்பைகள் கொடுக்க ஆயத்தமாக இருந்தனர்.
முதலில் மழலையில் தொடங்கி விருந்தினர் பரிசை கொடுத்துக் கொண்டிருந்தார்.பின் ஐந்தாம் வகுப்பு வந்தது...அதில் ப்ரியங்கா என்ற மாணவியை அழைத்தனர். அவள் வரைவது,பேச்சுபோட்டி,கட்டுரை எழுதுவது,நடனம்,மாறுவேடம் என அனைத்திலும் பரிசு வாங்க துள்ளித் துள்ளி ஓடிவந்து ஒவ்வொரு பரிசையும் வாங்கிக் குவித்தாள்...
பல பரிசுகளை அள்ளிச் சென்ற அந்த மாணவியைப் பாராட்டி பலரும் கரகோஷம் இட்டு அவள் வரும் போது உற்சாகப் படுத்தினர்.


அவள் ஒவ்வொரு பரிசுகளையும் ஒவ்வொருவரிடம் பெற்றாள்...அனைவரிடம் நின்று புகைப்படம் எடுத்து கொண்டாள்.தன்னுடைய அப்பா புகைப்படம் எடுப்பதை அறிந்த அவள் அப்பாவை நோக்கி பார்த்துப் புன்னகைத்தாள்...
அனைவரும் மேடையில் பேசியவர்கள் இத்துணை பரிசுகள் பெற்ற அவளின் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இப்பள்ளிக்கும் பாராட்டுகள் என பாராட்டினர்.

கைதட்டிக் கொண்டே ரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள் ப்ரியங்காவின் அம்மா சௌமியா...
திடீரென கண் விழித்தாள்.அப்பொழுது தான் தெரிந்தது கனவு என்று...
பக்கத்தில் படுத்திருந்த ப்ரியங்காவை பார்த்தாள்.முகத்தில் தடவி கொடுத்தாள்...தலையை கோதி விட்டாள்....அவள் நேற்று பரிசு வாங்கப் போவதை சொல்லிக் கொண்டே இருந்தாள்...அதையே நினைத்து படுத்ததால் கனவாக வந்தது.
எழுந்து தன் வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்..
வண்ணமயமான அழகிய கோலம் போட்டிருந்தாள் அம்மா..அத்தெருவில் அவளின் கோலத்தை பார்வையிட்டு தான் செல்லுவர். அம்மா சூப்பர் என்று ப்ரியங்கா காலையில் எழுந்து ஏன் மா என்னை கூப்பிடவில்லை என்று செல்லமாக கேட்கிறாள்...லீவு நாளில் போடலாம் ப்ரியா...வா மா என்று பல் துலக்கச் சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைகிறாள்....

சமையல் அறை வாசலில் வந்து நின்று அம்மாவிடம் பிரஷ் மேல் பேஸ்ட் வைப்பது போல காமித்து தன் கைகளை அசைத்து எங்கே பல் துலக்காமல் பேசினால் அம்மா கோபித்து கொள்வாள் என்பதால் என்று செய்கையாக கேட்கிறாள்...


சிரித்து கொண்டே அம்மா அங்க தான இருக்கு எடுத்து கொண்டுவந்து கையில் தருகிறாள்...அப்பா எப்பொழுதும் போல பேப்பர் படிக்க உட்காருகிறார்.
ப்ரியங்கா பால் குடித்துவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துகிறாள்.பின் அப்பாவிடம் செல்லுகிறாள்.அப்பா விளையாட்டு,அரசியல் நாட்டு நடப்பு என எதை சொல்ல வேண்டுமோ அதனை மட்டும் தன் மகள் தெரிந்திருக்க வேண்டுமென சொல்லி விடுவார்.

எல்லாவற்றையும் சொல்லும் அப்பா அம்மாவிடம் சண்டையிடுவது ஏன் என அறியாமல் இருந்தாள்.அம்மா அப்பாவை குறை சொல்லுகிறார்.பதிலுக்கு அப்பா அம்மாவை குறை சொல்லுகிறார் என நினைத்து கொண்டே பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகிறாள்.

அப்பாவும் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டே சௌமியா சௌமியா என பல முறை அழைத்து கொண்டே இருக்கிறார்.இதனை பார்த்த ப்ரியங்கா தன் அப்பா கண்ணாடி தேடி கொண்டிருக்க சௌமியா என்னோட கண்ணாடி பார்தாயா..காணுமே..ஏன் தான் மாற்றி மாற்றி வைக்கிறாய் என அப்பாவைப் போலவே சொல்லுகிறாள்..
அப்பா தேடுவதை விட்டிடு தன் மகளை ரசித்து கொண்டிருக்கிறார்..அம்மாவும் உள்ளே வந்து பார்க்கிறாள்..ஹே என இருவரும் அவள் பின் வருகிறார்கள்...சிரித்து மகிழ்ந்தனர்...
அப்பப்போ இப்படி தான் சௌமியா தன் வாழ்க்கையில் சிரிப்பாள்.எப்பவுமே இது வேணும் அது வேணும் என பெரிய லிஸ்டே வைத்திருப்பாள்...இதனால் வருவது தான் சின்னச் சின்ன சண்டைகளும்...பல நாட்களுக்கு வாக்குவாதங்களும்...என எப்பொழுது உணர போகிறாள் என மனதிலே சொல்லி கொள்கிறார் அப்பா.
மகிழ்ச்சியாக கிளம்பினர்.ப்ரியங்காவை பள்ளியில் விட்டிடு சௌமியாவை அலுவலகத்தில் இறக்கி விட்டு தன் அலுவலகத்திற்கு செல்லுகிறார் அப்பா...வண்டியில் செல்லும் போது அப்பாவும் அம்மாவும் அலுவலகத்தில் இருந்து ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வந்திடுங்க என்று பல முறை சொல்லி கொண்டே வந்தாள்...


பின் இருவரும் நிகழ்ச்சி முன்னரே அங்கே சென்று ஆவலோடு காத்திருந்தனர்.காலையில் அவள் கனவில் நிகழ்ந்தது நேரடியாக பார்த்து மகிழ்ந்தாள் அம்மா...

நிகழ்ச்சி முடியும் தருவாயிலும் ப்ரியங்கா தங்களிடம் வரவில்லையே என எண்ணிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ளே நாடகத்தில் நடிக்கும் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் நாடகத்தில் நடிக்க வேடமிட்டு கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி நிறைவாகும் இத்தருணத்தில் "நிம்மதியான வாழ்வு" என்ற நாடகத்தை நடித்து காட்ட ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ப்ரியங்கா மற்றும் நிவேதா என்று ஒலிப்பெருக்கியில் கேட்டவுடன் அம்மாவும் அப்பாவும் எதிர்பார்க்காததால் சொல்லவே இல்லையே என ஆச்சிர்யத்துடன் பார்த்தனர்.அப்பா புகைப்படம் எடுக்க முன்னே சென்றார்.
மேடையில் ஒரு பெரிய மரம் கொண்ட ஒரு இயற்கை சூழல் உள்ள பின் திரை அமைத்து அந்த மரத்தின் அடியில் ஒரு மாணவி அமர்ந்திருந்தாள் முனிவராக அடையாளமே தெரியாது போல் ப்ரியங்காவை வேடமிட்டிருந்தனர்.
பின் மாணவி நிவேதா இங்கும் அங்கும் அலைந்து திரியும் குரங்கு போல் வேடமிடப்பட்டிருந்தாள்.

முனிவர் எப்போ கண் திறப்பார் என காத்திருந்தது குரங்கு அங்கும் இங்கு அலைந்து கொண்டே...பின் முனிவரே என்று குரல் கொடுத்தது...
முனிவர் மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்கிறார்...குரங்கு தான் தன்னை அழைத்திருக்குமோ என்று பார்த்தார். ஆம் நான் தான் அழைத்தேன் முனிவரே என்னால் பேச முடியும் முன்பே ஒரு முனிவர் எனக்கு பேசும் வரம் தந்துள்ளார்.அவர் தங்களிடம் சென்று கற்று கொள்ள அனுப்பி வைத்தார் என்றது.

முனிவர் பொறுமையாக கேட்டு கொண்டு என்ன வேண்டும் உனக்கு என்றார்...

குரங்கு மோக்ஷ்ம் அடைய வழி சொல்லுங்கள் என்றது..
அப்படியா..சரி நான் சென்று நீராடி விட்டு வந்து விடுகிறேன் அது வரை இந்த பழத்தை பார்த்துக் கொள் என்றார்.

பழம் தானே நான் பார்த்து கொள்கிறேன் என்றது..

இப்பழத்தை சாப்பிட கூடாது என்றும் நான் வரும் வரை நீ ராம ராம என்று சொல்லி கொண்டே இரு என்று சொல்லிவிட்டு சென்றார் முனிவர். அவள் சென்று மறைவாக இருந்தாள் மேடையில் ஓரத்தில்...
ராம ராம ராம என்று சொல்லி பார்த்தது குரங்கு...எல்லோரும் இப்பொழுது இக்குரங்கை வேடிக்கை பார்த்தனர்.

கண்களால் அப்பழத்தை பார்த்து கொண்டே ராம ராம ராம என்றது...

பழத்தை சாப்பிட கூடாது என்று தானே சொன்னார் கையில் வைத்து கொண்டே சொல்லுவோம் என்று கையில் எடுத்து கொண்டே ராம ராம ராம ராம...என்று தன் முகபாவனையில் அசத்தினாள் அம்மாணவி.

பழத்தை சாப்பிட தானே கூடாது உரித்து கொண்டே சொல்லுவோம் என்று பழத்தை உரித்து கொண்டே ஒவ்வொரு முறையும் ராம ராம ராம என்றது...

பார்த்து கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்..
பின் யோசித்த குரங்கு பழத்தை சாப்பிட தானே கூடாது விழுங்கி விடுவோம் என பழத்தை விழுங்கி ரா.ம்....ம ரா...ம்...ம ரா...ம்....ம என்று திணறிக் கொண்டே சொன்னது.
ராம ராம ராம என்று ஒன்றும் அறியாதது போல கூறியது.
முனிவர் வந்து வானத்தை பார்த்து வணங்கிவிட்டு குரங்கை பார்த்து இங்கிருந்த பழம் எங்கே என்றார்...
பழத்தை சாப்பிட தானே கூடாது விழுங்கி விட்டேன் முனிவரே என்றது...

உடனே முனிவர் ஒரு சாதாரண பழத்தின் மீதுள்ள ஆசையைக்கூட உன்னால் விட இயலவில்லை நீ எப்படி மோக்ஷத்தை அடைய வழி கேட்கிறாய் என்றார்.
ஆசைகளுக்கும் எல்லை உண்டு அதிக ஆசைக் கொள்வதாலே கடனாளி ஆகி பின் தவிக்கிறார்கள் மனிதர்கள்...
நிம்மதியான வாழ்வு நம்மை சுற்றி இல்லை நம் மனதில் தான் உள்ளது.அம்மனதை அலைபாய விடாமல் இறைச் சிந்தனையோடு வேண்டியவருக்கு உதவினாலே மோக்ஷம் கிட்டும் என்றார் முனிவர்.
அனைவரும் கைத்தட்டினார்கள்......பின் தலைமை ஆசிரியர் முனிவராக வேடமிட இருந்த மாணவி கடும் காய்ச்சலால் இன்று வர இயலாததால் ப்ரியங்கா நேற்று பார்த்ததை வைத்தே அவள் இந்நாடகத்தில் நடித்ததாக குறிப்பிட்டார்....ப்ரியங்காவின் பங்களிப்பிற்கு வாழ்த்து சொல்லி குரங்காக வேடமணிந்த நிவேதாவையும் பாராட்டினார்...இன்னும் கரகோஷம் பல தெருக்களையும் தாண்டி கேட்டது...

இருவரும் அனைவரையும் வணங்கி கீழே வந்தனர்.

அம்மா சௌமியாவிற்கு இன்னும் நாடகத்தில் மகள் பேசியதே திரும்ப திரும்ப வந்து காதில் ஒலித்தது போன்று இருந்தது.அத்தருணம் தான் அப்பா எதிர்பார்த்த மாற்றம் சௌமியாவிடம் நிகழ்ந்தது.


ஆழ்மனதில் ஆசைகளிலிருந்து விடுபட்டு மிகவும் யதார்த்தமாக பள்ளியின் விழா பங்களிப்பு செய்ய வைத்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
சௌமியா தன் கணவரிடம் அவள் நடித்த நாடகத்தில் தன் மகள் கூறியதை சொல்லி நான் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் என உணர்ந்தவளாய் கூறினாள்...சற்றும் எதிர்பாராத மாற்றத்தை மகளும் கணவரும் மிக யதார்த்தமாக நிம்மதியான வாழ்வு நமக்கும் நிம்மதி அளித்தது என்று சிரித்து கொண்டே மகிழ்வாய் இருந்தனர்.
[நான் சமீபத்தில் எழுதிய முதல் சிறுகதை இது.உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.]

No comments:

Post a Comment